மௌன பூகம்பம்
அவளின்
ஞாபகங்களே
அவனுக்கு
சுவாசம்!!
***
பன்னிரெண்டு
பாலைவன
வருஷங்களுக்கு
பிறகு
அவளை
அவன் பார்க்கநேருகிறது
எங்கெனில்
...
ஒரு ரயில் நிலையத்தில்
எப்போதெனில்
ஒரு நள்ளிரவில்!!
***
எதிரெதிர்
திசையில் செல்லும் ரயில்கள்
இளைப்பாறிக்
கொள்ளும்
அந்த
இடைவெளியில்
***
ரயில்களின்
எதிரெதிர் பெட்டிகளில்
பழைய
கண்கள் நான்கு
பார்த்துக்
கொள்கின்றன
***
அப்பொழுது
மனசில்
எத்தனை மௌன
பூகம்பம்
உன்னை
பார்த்த ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன கண்கள்
***
நீதான ??
இல்லை
வேறொருவன் கண்களால்
நான் பார்க்கிறேனா??
***
மனசின்
பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு பிரவாகம்
இதயத்தின் ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து
மிதந்து
மேலே
வருகிறது
ஒ !!
வருஷங்கள்
எத்தனையோ
வழிந்த
பிறகும்
என்
மார்பு தடவும் அதே பார்வை
என் பழையவளே!!!
என் கனவுகளில்அலையும்
ஒற்றை
மேகமே!
உன்
நினைவுகளில்
எத்தனையாவது
பரணில்
இருக்கிறேன்??
என்
காதலுக்கும்
ஒரே
வயதென்று அறிவாயா???
***
உன்
பெயரை மறக்கடிப்பதில்
தூக்க
மாத்திரை கூடத்
தோற்றுபோனதே
!!
ஒ!!
நீ
மாறியிருக்கிறாய்
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது
உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு
***
இப்போதும்
நாம் பேசப்போவதில்லையா??
வார்த்தைகள்
இருந்தபோதும்
பிரிந்து
போனவர்கள்
ஊமையான
பிறகு சந்திக்கிறோமா ??
***
உன்
நினைவுகள்
உன்
கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப்
போலவே
விழித்திருக்கின்றன
***
ஒ!!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய்
எனக்கு
அடையாளம்
சொல்கிறதே
வேண்டாம்!!
***
விழியில்
ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
மடியில்
உறங்கும் உன் கிளியின்
உறக்கத்தை கெடுத்து
விடாதே!
சத்தம் கேட்கிறது
நம்மில்
ஒரு வண்டி
நகரப்போகிறது
போய்வருகிறேன்!
அல்லது
போய்வா !!
மீண்டும்
சந்திப்போம்
விதியை
விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்
***
அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை
நான் கேட்பேன்
"நீயும் என்னை காதலித்தாயா?"
- கவிப்பேரசு வைரமுத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக