திங்கள், 28 அக்டோபர், 2013

அனத்தலின் முதல் பிறந்த நாள் !!




பல பிளாக்குகள தேடி படிச்ச ஆர்வம் சும்மா எழுதுவோம்னு ஆரம்பிச்சி நண்பனின் ஒத்துழைப்போட முதல் வருடம் வந்தாச்சு.

டைரி குறிப்பு மாதிரி எதாவது எழுதலாம்னு யோசிச்சி ‘தேன்மிட்டாய்’ எழுதி நண்பனுக்கு அனுப்பி வெச்சேன். முதல் முயற்சி அவ்வளவு மோசமில்லைன்னு சொல்லல பட் அவன் ரொம்பவும் திட்டல. அந்த தைரியத்துல அடுத்து ‘புங்கை மரம்’ ன்னு ஒரு டாப்பிக் எழுதி அனுப்பினேன். அதை படிச்சிட்டு ஐஎஸ்டி கால்ல ஒரு ரெண்டு மணி நேரம் லெக்சர் குடுத்து..உஸ்ஸ்ஸ்ஸ்

எழுத்து எழுதறவங்களுக்கும் படிக்கறவங்களுக்கும் புடிச்ச மாதிரி இருக்கணும் அவன் பல விஷயங்கள சொன்னான். அதை எல்லாம் கேட்டு என்னோட ரசனையின் வெளிப்பாடா எழுதி அவன் பரவாயில்லைன்னு சொன்ன பதிவுதான் ‘நிலா பாருங்கள்’. சரி நாலு பதிவு தேத்திட்டோம் இப்ப பிளாக்குக்கு பேர் வெக்கணுமே. என்ன என்னவோ யோசிச்சு “அனத்தல்”ன்னு முடிவு பண்ணோம். மத்தவங்க படிச்சி கேவலமா இருந்து கிண்டல் கேலிக்கு ஆளாக கூடாதுன்னு அவன் பேரையே கடன் வாங்கி (புனை பெயர்) வச்சிகிட்டேன்.

எப்பவும் கவிதை பத்தி நிறைய பேசுவோம் ரசிப்போம் விவாதிப்போம். அந்த மாதிரி ஒரு பொன் மாலை பொழுதில் நீ ஏன் கவிதை எழுத கூடாது சும்மா முயற்சி பண்ணி பாருன்னு நண்பன் சொன்னதால எழுதுவோம்னு ஆரம்பிச்சி, இன்னைக்கு கவிதைகளின் அணிவகுப்போட முதல் பிறந்த நாள் எங்க அனத்தல்க்கு.

எப்பவும் போல வழக்கமான எழுத்து பிழையோட ஸ்டார்ட் மியூசிக் ஆச்சு.. பாவம் தோழன், வேலை வெட்டிய விட்டுட்டு எழுத்து பிழை சரி பண்ணி குடுத்து,சில பல திட்டுகள் வாங்கி இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லி குடுத்து ஓரளவுக்கு எழுத கத்துக்கிட்டு இருக்கேன். தோழனோட சில பல காரிதுப்பல்கள் கழுவி ஊத்தல்கள் எல்லாம் மானே தேனே மாதிரி சேத்துக்கனும் எல்லா கவிதைக்கும்..

இணையம் கத்துக்குடுத்த மிக முக்கியமான நல்ல பழக்கம் படிக்கறது. முன்னேல்லாம் புடிச்ச எழுத்தாளர் புத்தகம் மட்டும் படிப்பேன். இப்போ அது மாதிரி இல்லாம கிடைக்கற எல்லாத்தையும் படிக்க கத்திட்டு இருக்கேன். வார்த்தை எப்படி பயன்படுத்தி இருக்காங்க கொஞ்சம் கவனமா பார்க்கிறேன். இந்த ஒரு வருஷத்துல மிக சிறந்த கவிதைகள் எழுதாட்டியும், எங்க மனசுக்கு திருப்தியான சில கவிதைகள் எழுதனதுல கொஞ்சம் சந்தோஷமா இருக்கு.

எங்க அனத்தல்லின் மிக முக்கிய ரசிகர் என்னோட கணவர் அப்புறம் சில கூட பிறக்காத தம்பிகள். நன்றி  எல்லாம் சொல்லமாட்டோம் ஏன்னா ரசிச்சே ஆகணும் அது தான் அவுங்க விதி.

நடுவுல கொஞ்சமா டிவிட்டர் பக்கம் போனதுல அனத்தல்ல நிறைய எழுத முடியல. கூடவே தேவை இல்லாத ஆணிகள் ஆனா புடிங்கியே ஆவவேண்டியதும் சேந்துகிச்சி. அடுத்த வருடம் இன்னும் அட சொல்ல வைக்கற மாதிரி எழுத முயற்சி பண்ணனும் பாக்கலாம் .

பதிவுகளை ரசித்த அனைவருக்கும் நன்றிகளுடன் அனத்தல் அடுத்த ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனத்தல் !!

அகன்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

நமக்கானவை...



 
Y
சொல்லேன் ஏதாவது என்று
நீ கேட்கையில் ,
சொல்லிவிட தான் ஆசை.
காற்றில் அளந்தெடுக்கும்
வார்த்தைகளை
எப்படி மொழிபெயர்ப்பது ??
 
Y
எனக்கு மட்டும் புரியும்
சங்கோத வார்த்தையுடன் நீ.
உனக்கு மட்டும் புரியும்
மென்சிரிப்புடன் நான்.
நம்மை ரசித்தபடி காதல்!!
 
Y
உன்னோடு
கோப்பை தேனீரும்
சிந்தி சிதறும் புன்னகையும்
ஈரம் காயாத இதழைணைப்பும்
திகட்டுவதில்லை...
 
Y
"எந்த நொடி என்னில் விழுந்திருப்பாய்??"
என்று நொடிக்கொரு தரம்
யோசிக்கையில்
உன்னுள் நான்...
 
Y
ஈரம் போகாத காதலுடன் நான்
என் கூந்தல் கலைத்து
அருகில் நீ!!
 
Y
உதடுகளை அணைத்துவிட்டாய்.
சிணுங்கும் வளையலை???
 
Y
அன்பு சண்டையிட்டு
 சலித்துவிட்டது,
வா
கொஞ்சம் கொஞ்சிவிட்டு
மீண்டும் தொடராம்...
 
Y
கை பிடித்து
எதுவும் பேசமால் நீ!
 உள்ளம் பேசும் அனைத்திற்கும்
பதில் அளித்தபடி நான் !!
 
Y
உற்று பார்த்திருக்கிறோம்
 ஊடல் அவிழும் நொடிக்காய்.
 இதோ இப்போது
அரங்கேறிவிடுமோ
என்ற எதிர்ப்பார்ப்புடன்
நான்கு கண்கள்..
 
Y
எந்த நொடி மலர்ந்தது
என்ற தேடலில்
தொடங்குகிறது
காதலின் சுவாரஸ்யம் ...

-அகன்

சனி, 19 அக்டோபர், 2013

முத்த மொழி

 

 

Y
இழுத்தணைத்து
முத்தமிடும் நொடியில்
இல்லாமல் போகிறேன்!!

Y
அன்பின் அதீதத்தை
முத்தத்தால்
மொழிபெயர்க்கிறாய்...

Y
சமாதனப்படுத்த
நீ கொடுக்கும்
முத்தங்களால் அலுக்கவில்லை,
உன்னோடு போடும்
சண்டைகள்..

Y
உறங்கிவிட்டாய்.
சிதறிய முத்தங்களை
எண்ணியபடி நான்!!

Y
ஒரு நீள் முத்தத்தை
தின்று தீர்க்கிறோம்
இருவரும்,
இன்னும் தீர்ந்தபாடில்லை......




Y
கேட்கும் ஆவலில் நானும்,
கொடுக்கும் ஆசையில் நீயும்
ஒரே புள்ளியில் நிற்கிறோம்.
"முத்தம்"

Y
தித்திக்க தித்திக்க பேசுகிறாய்,
கூடுதல் சுவைக்கு
முத்தம் சேர்த்து.

Y
ஒரே நேர்க்கோட்டில்
சந்தித்தோம் .
சிதறியது முத்தம்...

Y
உன் உதட்டு
பதிப்பில் பிரசுரமானது
என் கவிதை!!

Y

நீள் முத்தத்தின்
இடைப்பட்ட நிமிடங்களில்
ஜனித்தும் மரணித்தும் நான்.
 
- அகன்

டிவிட்டர் மொழி காதல் துளிகள் - 1





Y
எத்தனை இயல்பாய்
உன் பெயர்
எழுதுகிறது
இந்த புது பேனா!!

 
Y
உறக்கம் கலைப்பதில்
நீயோ
உன் நினைவோ
தோற்ப்பதே இல்லை.
ஏதோ ஒன்றாய் ஆரம்பித்து
என்னுள் நிறைவதில்
எங்கே தூக்கம்.??
 

 Y
எனக்கான இயல்பை
உன்னிடம் தொலைத்துவிட்டு
அடையாளம் தேடி அலையும்
என்னிடத்தில்
எதுவுமில்லை.
உன்னை தவிர!!
 
 Y
விட்டும் விலகாமல்
ரொம்பவும் ஒட்டாமல்
வாழ்க்கை முழுக்க
கூடவே வருகிறது
முதல் காதல்!!
 
 Y
அலுக்கவில்லை!!
நெஞ்சோடு
அணைத்தபடி பேசு.

 Y
புதிதாய்
எதுவும் மாறாததால்..
அதே வார்த்தைகள் தான்
நம்மிடையே!!
 
 Y
உன் விரல்கள்
என்னதான் பேசும்
என் விரல்களுடன்???
விலக மனமற்று
இணைந்தே கிடக்கிறது.!!
 

- அகன்

உயிர் பெற்ற எழுத்து



உன்னை மறக்கவிடாமல்

இருக்க

நீ கொடுத்துச் சென்ற

கவிதைகள்

தினமும் கனவில்....


ஒவ்வொரு எழுத்தாய்

உன் உருப்பெற்று


உயிரை வதைக்கிறது....


எழுத்து வழி

இதயம் நுழைந்தவன்.. 


இன்று இயல்பு மாறி

நான் எழுதுகிறேன்

நீ வாசிக்க...


- அகன்

செவ்வாய், 30 ஜூலை, 2013

பதில் தேடி !!!






எனக்கான பதில்

உன்னிடத்தில் மட்டுமே.


சாதகமான பதிலுக்காய்

சரியாய் அடுக்குகிறேன்

கேள்விகளை!!!


கேட்டுவிடதான் எத்தனை எத்தனை

என்னிடத்தில்.

சொல்லிவிடும் மனமிருந்தால்

சீக்கிரம் சொல்லிவிடு.


காத்திருப்பில்

கேள்விகள் பல..!!

அகன்

திங்கள், 10 ஜூன், 2013

காதலுடன் கூடல்....




வெளியே தள்ளி
மனக்கதவை

இறுக தாளிட்டேன்


மனமோ ஒரு நிலையில்
இல்லை


சென்றுவிடுவாயோ என்று
ஒரு புள்ளியில் தோன்றிய பயம்

முழுதாய் ஆக்ரமிக்க
,

பதற்றம் தேங்கிய கண்களால்

கதவின் இடுக்கில் பார்க்கிறேன்..
கண்சிமிட்டி சிரிக்கிறாய்
..

எதுவும் தோன்றாமல்

காதல் மிகுதியில்

கதவைத் திறந்து
கட்டி அணைத்துக் கொள்கிறேன்..

எந்த நம்பிக்கையில்

எனக்காய் காத்திருந்தாய்
?
என்று கேள்வியாய் பார்க்கையில்
,
கண்களில் முத்தமிட்டு

"
காதல்
"
என்றாய்..


- அகன்

வியாழன், 16 மே, 2013

தேடல்....!!






தொலைத்துவிட்டேன்.....

வேண்டுமென்று தொலைத்தேனா ??

சுலபமாய் மீண்டும் கிடைத்துவிடும்

என்று எண்ணித் தொலைத்தேனா ??

இல்லை,

தேடும் சமயம் உன் நினைவுகளோடு

பயணிப்பதற்கு தொலைத்தேனா ??
 

தெரியவில்லை.

 
உன்னை தொலைத்தது நிஜம்.

தேடுவதும் நிஜம்.

 
தேடும் எல்லா சமயமும்

கிடைக்கிறது

புது நட்பும், புது உறவும்.

 
இருந்தும் தேடுகிறேன் உன்னை...
 

சிலமுறை

நீ கிடைத்துவிடுவாய் என்று

தேடுகிறேன்.

 
பலமுறை

நீ கிடைத்துவிடக் கூடாது என்றே

தேடுகிறேன்.
 

கிடைத்துவிடாதே ,

இந்த தேடல் கொடுக்கும்

வலி பிடித்திருக்கிறது.


- அகன்

 

செவ்வாய், 14 மே, 2013

மனதின் சில துளிகள் - 2






மழை கா பகலில்,
உன் மூச்சும்
என் மூச்சும்
உரசும் நெருக்கத்தில்,
எதிர்பாராத ஒரு நொடியில்,
சட்டென்று
பதித்து விட்டாய்
முதல் முத்தத்தை...!!
- அகன்
 





 

வியாழன், 25 ஏப்ரல், 2013

நிலா பாருங்கள் - ஒரு மீள் பதிவு



நிலவை பற்றி எழுதுபவர்கள் கற்று குட்டிகள் என்பது எழுத்துலகின் நிலைப்பாடு. அதிபட்சமாக எழுத்துலகில் ரசித்து துவைத்து காய வைத்தது நிலவை மட்டுமே. நிலவின் வெண்மைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்ககூடுமோ??, இருந்தாலும் என் பங்கிற்கு கொஞ்சம் சொட்டு நீலமாவது போடலாம் என்று எழுதுகிறேன்.

நிலாவுடனான நட்பு எல்லோரையும் போல எனக்கும்சிறு வயது முதலே ஆரம்பம். நிலா சோறு ஊட்டுவதில் தொடங்கி , நிலவிடம் மல்லிகை பூவும் மையும் கேட்டு அதனுடன் சிநேகம் வளர்த்தேன். இரவின் மீதிருந்த பயத்தை போகிய தேவதை. நிலவுடன் பயணித்த பயணங்கள் பல பல.

கவிஞர்கள் சொல்லி சொல்லி நம்மை உரு ஏற்றி விட்டார்களா அல்லது உண்மையிலேயே நிலா அழகு தானா என பல முறை நினைத்ததுண்டு. எப்படியோ, என்னை பொருத்த வரை நிலா பார்த்தல் என்பது ஒரு அழகியல்.

நிலவின் அழகியல் தான் எனக்கு ரசிக்க கற்றுக்கொடுத்தது. அதன் தாக்கத்தில் தான் மேகங்களையும், தொடு வானத்தையும், புது பார்வை பார்க்க தோன்றியது.நிலா பெண் சமைக்கும் கை பக்குவம் அது தேவதைகளிடம் மட்டுமே கிடைக்கும் சுவை.

முழு நிலவில் கடல் நீரில் கால் நனைப்பதை விட கடற்கரை மணலில் கிடப்பது அலாதியான சுகம் . நிலவும், பொக்கிஷமான நினைவுகளும் சுற்றம் மறக்க வைத்து அதனுடன் நம்மை ஈர்த்துக்கொள்ளும். நிலவின் அருகாமையில் நமக்கு மிக பிடித்த பாடல்களும், கவிதையும் நூறு மடங்குமெருகேற்றும் நுட்பம் நிலவுக்கு மட்டுமே சாத்தியம்.

எல்லா முழு நிலவும் அழகுதான்.காதலனின் மேனி தடவும் பார்வையில் சட்டென்று பேரழகி ஆகும் காதலி போல், சித்ரா பௌர்ணமி அன்று அவள் பேரழகி ஆகிவிடுவாள். அவளை பூரண அழகாக்கிய காதலன் யாராக இருக்கக்கூடும்?

காதல் கொடுக்கும் இன்பத்தை விட , நிலவு கொடுக்கும் சுகம் பேரானந்தம். காதலுடன் வாழும் நான் இப்படி சொல்வதில் எனக்கே ஆச்சர்யம் தான்.ஆனால் இது தான் நிதர்சனம். காதல் கொண்ட மனம் சிறகடித்து பறந்தாலும் நாணம், மௌனம், பயம், வயிற்ருக்குள் பறக்கும் பட்டாம் பூச்சி என்று சில அசொகரியங்களையும் கொடுப்பதை மறுக்கமுடியாது. ஆனால் நம் நிலா பெண் காதலை இரண்டாம் பட்சமாக்கிஅவள் மீது மட்டுமேபோதை கொள்ளசெய்கிறாள் . அவளின் குளுமையிலும் அழகிலும் அடிமைபடுத்தி விடுகிறாள்.

சித்ரா பௌர்ணமி அன்று நிலா சோறு சாப்பிடுவது எல்லா வருடமும் நடக்கும் வைபவம். புளிச்ச கீரை அல்லது காரக்கொழம்பு பிசைந்து அம்மா அல்லது பாட்டி உருண்டை உருட்டி தரும் சாப்பாட்டை நான் நீ என்று போட்டி போட்டு சாப்பிடுவது அற்புதம். அன்று மட்டும் உணவின் சுவை எப்படித்தான் நான்கு மடங்காகுமோ?, நிலா பென் சமைத்திருப்பாள் போல.

என் எல்லா உற்ற நண்பர்களிடமும் நான்கேட்கும் மிக முக்கிய கேள்வி " பௌர்ணமி நிலவில் உனக்கு தெரியும் பிம்பம் என்ன?" பலர் நிலவில் பாட்டி வடை சுடுவது போல் தோன்றுவதாக சொல்லுவார்கள். ஆனால் எனக்கு எப்போதும் ஒரு அம்மா குழந்தைக்கு பால் குடுப்பது போன்ற பிம்பம் மட்டுமே தெரியும். நிலா பார்க்கும் எல்லாசமயமும்தெரியாத பாட்டியை தேடுவதும், பின் அந்த அம்மாவிடமே லயித்து விடுவதும் வாடிக்கை.

முழு நிலவுஅதன்மல்லிகை வாசம்கொண்டு மனம்நிரப்ப தவறுவதில்லை. நிலவின் குளுமையும், அதன் பிம்பம் கொடுக்கும் கற்பனைகளும் பகிர்தலுக்கு அப்பாற்பட்டது. அதன் அற்புதம் உணர மட்டுமே படவேண்டும். நிலவுடன் , மிக சிறந்த வாழ்வின்தருணங்களைஅசை போட்டு இளைப்பாறும் சுகம் பழகிப்பாருங்கள் , அது மனதை இறகு போல் பறக்கசெய்யும்.


நிலா பாருங்கள்...