நிலவை பற்றி எழுதுபவர்கள் கற்று குட்டிகள் என்பது எழுத்துலகின் நிலைப்பாடு. அதிபட்சமாக எழுத்துலகில் ரசித்து துவைத்து காய வைத்தது நிலவை மட்டுமே. நிலவின் வெண்மைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்ககூடுமோ??, இருந்தாலும் என் பங்கிற்கு கொஞ்சம் சொட்டு நீலமாவது போடலாம் என்று எழுதுகிறேன்.
நிலாவுடனான நட்பு எல்லோரையும் போல எனக்கும்சிறு வயது முதலே ஆரம்பம். நிலா சோறு ஊட்டுவதில் தொடங்கி , நிலவிடம் மல்லிகை பூவும் மையும் கேட்டு அதனுடன் சிநேகம் வளர்த்தேன். இரவின் மீதிருந்த பயத்தை போகிய தேவதை. நிலவுடன் பயணித்த பயணங்கள் பல பல.
கவிஞர்கள் சொல்லி சொல்லி நம்மை உரு ஏற்றி விட்டார்களா அல்லது உண்மையிலேயே நிலா அழகு தானா என பல முறை நினைத்ததுண்டு. எப்படியோ, என்னை பொருத்த வரை நிலா பார்த்தல் என்பது ஒரு அழகியல்.
நிலவின் அழகியல் தான் எனக்கு ரசிக்க கற்றுக்கொடுத்தது. அதன் தாக்கத்தில் தான் மேகங்களையும், தொடு வானத்தையும், புது பார்வை பார்க்க தோன்றியது.நிலா பெண் சமைக்கும் கை பக்குவம் அது தேவதைகளிடம் மட்டுமே கிடைக்கும் சுவை.
முழு நிலவில் கடல் நீரில் கால் நனைப்பதை விட கடற்கரை மணலில் கிடப்பது அலாதியான சுகம் . நிலவும், பொக்கிஷமான நினைவுகளும் சுற்றம் மறக்க வைத்து அதனுடன் நம்மை ஈர்த்துக்கொள்ளும். நிலவின் அருகாமையில் நமக்கு மிக பிடித்த பாடல்களும், கவிதையும் நூறு மடங்குமெருகேற்றும் நுட்பம் நிலவுக்கு மட்டுமே சாத்தியம்.
எல்லா முழு நிலவும் அழகுதான்.காதலனின் மேனி தடவும் பார்வையில் சட்டென்று பேரழகி ஆகும் காதலி போல், சித்ரா பௌர்ணமி அன்று அவள் பேரழகி ஆகிவிடுவாள். அவளை பூரண அழகாக்கிய காதலன் யாராக இருக்கக்கூடும்?
காதல் கொடுக்கும் இன்பத்தை விட , நிலவு கொடுக்கும் சுகம் பேரானந்தம். காதலுடன் வாழும் நான் இப்படி சொல்வதில் எனக்கே ஆச்சர்யம் தான்.ஆனால் இது தான் நிதர்சனம். காதல் கொண்ட மனம் சிறகடித்து பறந்தாலும் நாணம், மௌனம், பயம், வயிற்ருக்குள் பறக்கும் பட்டாம் பூச்சி என்று சில அசொகரியங்களையும் கொடுப்பதை மறுக்கமுடியாது. ஆனால் நம் நிலா பெண் காதலை இரண்டாம் பட்சமாக்கிஅவள் மீது மட்டுமேபோதை கொள்ளசெய்கிறாள் . அவளின் குளுமையிலும் அழகிலும் அடிமைபடுத்தி விடுகிறாள்.
சித்ரா பௌர்ணமி அன்று நிலா சோறு சாப்பிடுவது எல்லா வருடமும் நடக்கும் வைபவம். புளிச்ச கீரை அல்லது காரக்கொழம்பு பிசைந்து அம்மா அல்லது பாட்டி உருண்டை உருட்டி தரும் சாப்பாட்டை நான் நீ என்று போட்டி போட்டு சாப்பிடுவது அற்புதம். அன்று மட்டும் உணவின் சுவை எப்படித்தான் நான்கு மடங்காகுமோ?, நிலா பென் சமைத்திருப்பாள் போல.
என் எல்லா உற்ற நண்பர்களிடமும் நான்கேட்கும் மிக முக்கிய கேள்வி " பௌர்ணமி நிலவில் உனக்கு தெரியும் பிம்பம் என்ன?" பலர் நிலவில் பாட்டி வடை சுடுவது போல் தோன்றுவதாக சொல்லுவார்கள். ஆனால் எனக்கு எப்போதும் ஒரு அம்மா குழந்தைக்கு பால் குடுப்பது போன்ற பிம்பம் மட்டுமே தெரியும். நிலா பார்க்கும் எல்லாசமயமும்தெரியாத பாட்டியை தேடுவதும், பின் அந்த அம்மாவிடமே லயித்து விடுவதும் வாடிக்கை.
முழு நிலவுஅதன்மல்லிகை வாசம்கொண்டு மனம்நிரப்ப தவறுவதில்லை. நிலவின் குளுமையும், அதன் பிம்பம் கொடுக்கும் கற்பனைகளும் பகிர்தலுக்கு அப்பாற்பட்டது. அதன் அற்புதம் உணர மட்டுமே படவேண்டும். நிலவுடன் , மிக சிறந்த வாழ்வின்தருணங்களைஅசை போட்டு இளைப்பாறும் சுகம் பழகிப்பாருங்கள் , அது மனதை இறகு போல் பறக்கசெய்யும்.
நிலா பாருங்கள்...