புதன், 19 டிசம்பர், 2012

குழந்தை தொழிலாளர்கள் - 1


குழந்தை தொழிலாளர்கள்


குழந்தையின் முதல் சிரிப்பில்
ஒரு
தேவதை பிறக்கிறாள்!!

"
இங்கு குழந்தை
தொழிலாளர்களுக்கு
வேலை இல்லை"
அறிவிப்பு-
தேவதைகளின்
கண்ணீர் அருவியில்
கரையவில்லை!!

"
இந்த அறிவிப்பு
மகிழ்வை தரவில்லையா?"
கடவுள் கேட்கிறார்??

தொண்டை அடைக்க
அவர்களின் பதில்
"
எங்குமே குழந்தைகள்
தொழிலாளர்கள் இல்லை" -
என்பதாக தானே
இருக்கவேண்டும்.

கதறும் தேவதைகள்
மனிதம் மரித்த
மண் விட்டு
சொர்க்கம் செல்கிறார்கள்
புதிதாய் பிறந்த தேவதையுடன் !!!

- அகன்

அன்னை தமிழின் இன்றைய நிலை

அன்னை தமிழின் இன்றைய நிலை ( எழுத்தோலை கவிதை திருவிழா )


பண்பட்ட
தமிழாசிரியன்
கேட்டான்..
பஸ்ஸ்டாப்பு லெஃப்டா?

குற்றியலுகரமாய்
முன் வார்த்தை முடிவிலும்,

உயிர்
எச்சமாய்
பின் வார்த்தை முடிவிலும்,

தொ-ங்கிக்
கொண்டிருக்கிறாள்
தமிழ்...

நேரமில்லை
உனக்கு
காப்பாற்றி மேலேற்ற!

பெருமைக்காய்
பொது இடத்தில
தமிழை மறுக்கிறாய்…

பகட்டான உடையில்லா தாய்
பள்ளிக்கு வருவதை
வெறுக்கும் சிறுவன் போல!

எப்போதாவது
வலிக்கும் போதும்,
சோகம் நெரித்து
கதறும் போதும்,
முன்னுக்கு வருகிறாள் தமிழ்..

கீறினால்
வெளியே பீரிடும்
ரத்தம் போல !

உண்மை
உணர்ந்து
மீண்டு வருவாயென
தவம் இருக்கிறாள்
தமிழ்...

உயிர்
வரைக்கும்
வலி கொடுத்து-
கிழித்துப் பிறந்தாலும்
பொருத்துக் கொள்ளும்
தாயைப் போல !

- அகன்


 

செவ்வாய், 18 டிசம்பர், 2012

நிலா பாருங்கள் !!



     நிலவை பற்றி எழுதுபவர்கள் கற்று குட்டிகள் என்பது எழுத்துலகின் நிலைப்பாடு. அதிபட்சமாக எழுத்துலகில் ரசித்து துவைத்து காய வைத்தது நிலவை மட்டுமே. நிலவின் வெண்மைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்ககூடுமோ??, இருந்தாலும் என் பங்கிற்கு கொஞ்சம் சொட்டு நீலமாவது போடலாம் என்று எழுதுகிறேன்.

  நிலாவுடனான நட்பு எல்லோரையும் போல எனக்கும் சிறு வயது முதலே ஆரம்பம். நிலா சோறு ஊட்டுவதில் தொடங்கி , நிலவிடம் மல்லிகை பூவும் மையும் கேட்டு அதனுடன் சிநேகம் வளர்த்தேன். இரவின் மீதிருந்த பயத்தை போகிய தேவதை. நிலவுடன் பயணித்த பயணங்கள் பல பல.

 கவிஞர்கள் சொல்லி சொல்லி நம்மை உரு ஏற்றி விட்டார்களா அல்லது உண்மையிலேயே நிலா அழகு தானா என பல முறை நினைத்ததுண்டு. எப்படியோ, என்னை பொருத்த வரை நிலா பார்த்தல் என்பது ஒரு அழகியல்.
 
  நிலவின் அழகியல் தான் எனக்கு ரசிக்க கற்றுக்கொடுத்தது. அதன் தாக்கத்தில் தான் மேகங்களையும், தொடு வானத்தையும், புது பார்வை பார்க்க தோன்றியது.நிலா பெண் சமைக்கும் கை பக்குவம் அது தேவதைகளிடம் மட்டுமே கிடைக்கும் சுவை.

  முழு நிலவில் கடல் நீரில் கால் நனைப்பதை விட கடற்கரை மணலில் கிடப்பது அலாதியான சுகம் . நிலவும், பொக்கிஷமான நினைவுகளும் சுற்றம் மறக்க வைத்து அதனுடன் நம்மை ஈர்த்துக்கொள்ளும். நிலவின் அருகாமையில் நமக்கு மிக பிடித்த பாடல்களும், கவிதையும் நூறு மடங்கு மெருகேற்றும் நுட்பம் நிலவுக்கு மட்டுமே சாத்தியம்.
 
  எல்லா முழு நிலவும் அழகுதான்.காதலனின் மேனி தடவும் பார்வையில் சட்டென்று பேரழகி ஆகும் காதலி போல், சித்ரா பௌர்ணமி அன்று அவள் பேரழகி ஆகிவிடுவாள். அவளை பூரண அழகாக்கிய காதலன் யாராக இருக்கக்கூடும்?

  காதல் கொடுக்கும் இன்பத்தை விட , நிலவு கொடுக்கும் சுகம் பேரானந்தம். காதலுடன் வாழும் நான் இப்படி சொல்வதில் எனக்கே ஆச்சர்யம் தான்.ஆனால் இது தான் நிதர்சனம். காதல் கொண்ட மனம் சிறகடித்து பறந்தாலும் நாணம், மௌனம், பயம், வயிற்ருக்குள் பறக்கும் பட்டாம் பூச்சி என்று சில அசொகரியங்களையும் கொடுப்பதை மறுக்கமுடியாது. ஆனால் நம் நிலா பெண் காதலை இரண்டாம் பட்சமாக்கி அவள் மீது மட்டுமே போதை கொள்ளசெய்கிறாள் . அவளின் குளுமையிலும் அழகிலும் அடிமைபடுத்தி விடுகிறாள்.

 சித்ரா பௌர்ணமி அன்று நிலா சோறு சாப்பிடுவது எல்லா வருடமும் நடக்கும் வைபவம். புளிச்ச கீரை அல்லது காரக்கொழம்பு பிசைந்து அம்மா அல்லது பாட்டி உருண்டை உருட்டி தரும் சாப்பாட்டை நான் நீ என்று போட்டி போட்டு சாப்பிடுவது அற்புதம். அன்று மட்டும் உணவின் சுவை எப்படித்தான் நான்கு மடங்காகுமோ?, நிலா பென் சமைத்திருப்பாள் போல.

 என் எல்லா உற்ற நண்பர்களிடமும் நான் கேட்கும் மிக முக்கிய கேள்வி " பௌர்ணமி நிலவில் உனக்கு தெரியும் பிம்பம் என்ன?" பலர் நிலவில் பாட்டி வடை சுடுவது போல் தோன்றுவதாக சொல்லுவார்கள். ஆனால் எனக்கு எப்போதும் ஒரு அம்மா குழந்தைக்கு பால் குடுப்பது போன்ற பிம்பம் மட்டுமே தெரியும். நிலா பார்க்கும் எல்லா சமயமும் தெரியாத பாட்டியை தேடுவதும், பின் அந்த அம்மாவிடமே லயித்து விடுவதும் வாடிக்கை 
 
முழு நிலவு அதன் மல்லிகை வாசம் கொண்டு மனம் நிரப்ப தவறுவதில்லை. நிலவின் குளுமையும், அதன் பிம்பம் கொடுக்கும் கற்பனைகளும் பகிர்தலுக்கு அப்பாற்பட்டது. அதன் அற்புதம் உணர மட்டுமே படவேண்டும். நிலவுடன் , மிக சிறந்த வாழ்வின் தருணங்களை அசை போட்டு இளைப்பாறும் சுகம் பழகிப்பாருங்கள் , அது மனதை இறகு போல் பறக்க செய்யும்.


 
நிலா பாருங்கள்... 




தமிழ் வழி கல்வி !!


 தமிழ் வழி கல்வி ( எழுத்தோலை கவிதை திருவிழா )

ஆலின்
விழுது
ஆலைத் தாங்க வேண்டும்..
கல்வியைக் காரனம் சொல்லி
நீ
வேறைத் தாங்காதே !

இன்று பிற மொழியில்
கற்பது பெருமையென்று
சொன்னால்..
நாளை
நரகல் தின்பது
நாகரீகம் என்று
ஊட்டப்படுவாய் !

அறிவியலைக்
கற்க
அயல்மொழி வேண்டுமா?
தொலைநோக்கி வரும் முன்பே
செவ்வாயின் நிறம் சொன்ன
வம்சம் நீ !

காற்றில்லாக்
கடற்கரையில்
பட்டம் வெறும்
காகிதம் தான்...
உனக்கு காற்றாய் இருக்கட்டும்
தமிழ் !

ஒளிச்சேர்க்கை
செய்ய
ஆயிரம் மொழிகள்
இலைகளாய் வரும்...
உனக்கு வேராய் இருக்கட்டும்
தமிழ் !

தமிழில்
உலகை படி…
உன்னால் உலகம்
தமிழ்ப் படிக்கட்டும் !

- அகன்