சனி, 27 அக்டோபர், 2012

இன்ப??? சுற்றுலா



அம்மா, அப்பா, , கணவர் மற்றும் குழந்தைகளுடன் இன்ப சுற்றுலா செல்ல முடிவானது. எங்க போகலாம்னு நானே முடிவு செய்யனும்னு சொல்லிட்டாங்க . அலுவலகத்தில் "டேமஜெர்" அப்படி இப்படி போகும்போது கணினியில் இடம் தேடி, வரைப்படம் பிரிண்ட் அவுட் எடுத்தாச்சு. கணவரிடம் இருந்து போன்,"கொஞ்சம் வேலை அதிகம்… வீட்டுக்கு போகும்போது நீயே ஸ்நாக்ஸ் வாங்கிட்டு போ"ன்னு சொல்லி….



நொறுக்கு தீனிக்கு கடைக்கு சென்று சின்னதுக்கு,பெருசுக்கு பிடித்தவை எல்லாம் வாங்கிவந்து கட்டை ப் பையில் அடுக்கும் சமயம் , "மம்மி உருளைக் கிழங்கு சிப்ஸ் வாங்கலையா ? மறந்துட்டபாரு, எனக்கு கண்டிப்பா வேணும்னு" சின்னது ஒரே நச்சி. அப்பாவிடம் சொல்லி வாங்கிவந்த பிறகுதான் குட்டீஸ் குதிப்பது நின்றது.

அய்யோ , பேப்பர் பிளேட் மறந்துட்டேன் என்று திரும்பவும் கடைக்கு சென்று, விட்டுப்போன பொருள் எல்லாம் வாங்கிவந்து அடுக்கி முடித்து. தண்ணி,கரண்டி,துவலை,ஸ்பூன் எல்லாம் எடுத்து வைத்து அப்பாடா என்று ஆனது.

சுற்றுல்லா சாப்பாடு என்ன எடுத்துட்டு போகறதுன்னு ஒரு பெரிய சாதக பாதகங்களுக்கு பிறகு சப்பாத்தி,தக்காளி தொக்கு, கொஞ்சம் எலுமிச்சை சாதம் , தயிர்சாதம் , என்று முடி வு செஞ்சோ
ம்.

கேமரா சார்ஜ் போட்டு, குட்டீஸ்க்கு விளையாட பந்து, டிரஸ் , எக்ஸ்ட்ரா ஒரு செட்டு டிரஸ் எல்லாம் எடுத்து வச்சி படுக்க போகும்போது மணி 11.

6 மணிக்கு அலாரம் அடிக்க, அம்மாவும் நானுமாக எல்லாம் சமைச்சு எடுத்து வச்சி, காலை டிபன் ரெடி பண்ணி,குளிச்சி , பசங்கள ரெடி பண்ணி , காரில் ஏறும்போது மணி 11. ஏறி உக்காந்து ஒரு பத்து நிமிஷத்தில் மம்மி தண்ணி, அடுத்த அரை மணியில் சூச்சூ. பெரிய போராட்டத்துக்கு பின்னா டி செல்ல வேண்டிய இடம் வந்து சேந்தாச்சு. அப்பாடா!!

ஒரு பத்து நிமிஷம் சறுக்குமரம், ஊஞ்சலும் மாத்தி மாத்தி விளையாண்டுக்கிட்டு இருக்கும் போது, சின்னது வழக்கம் போல கீழ விழுந்து, அழுது, மாத்தி மாத்தி சமாதானம் படுத்தி... ஒரு வழியா எல்லாம் அடங்கி, சாப்பாட்டு கடை ஆரம்பிக்கும்போது மணி 2 . குட்டீஸ் அதுவேனும், இதுவேண்டாம்னு ரகளை பண்ணி எல்லாரும் சாப்பிட்டு முடிக்கும் போது மணி 3. திரும்ப மணல் விளையாட்டு ஒரு அரைமணிநேரம்,திரும்பவும் சறுக்குமரம், ஊஞ்சலும் மாத்தி மாத்தி விளையாடி…உக்கார நேரம் இல்லாம திரும்பவும் எல்லாத்தையும் அடுக்கி, டிராபிக்ல மாட்டி வீடு வந்து சேரும் போது மணி 6.30. சாயங்கால டீ போட்டு குடுத்துட்டு , அம்மாவும் நானுமாக பாத்திரம் விளக்கி ,ராத்திரி சாப்பாடு ரெடி பண்ணி…..".. ஸ்ஸ்ஸ்.….அப்பா"

எல்லாம் முடிந்து படுக்கபோகும் முன் அம்மாகிட்ட கேட்டேன்,

"எவம்மா இதுக்கு இன்ப சுற்றுலானு பேரு வச்சான்???"

கருத்துகள் இல்லை: