செவ்வாய், 19 மார்ச், 2013

காதல் கடிதம் .....


ஒரு காதல் கடிதம்

வாழ்ந்து முடிக்கும் காலத்துக்கும்
உன்னோடான காதலை
ஒரு கடிதத்தில் கேட்கிறாய்.


எழுதிட முடியாதா என்ன??
இதோ
நான் தயார்.


அதற்க்கு முன்,
ஒரு தாளில் கொட்டி தீர்த்திட முடியுமா ???
ஏன் சொல்லவேண்டும்?
புரியாமலா காதலில் கசிந்துருகுகிறாய் ??
அறியாமலா நேசமிகுதியில் கலந்தோம்??
இப்படி கேள்விகள் பல.


இல்லை.
இயல்பாய் முளைத்து,
விருட்சமான காதலை
எழுதத்தான் போகிறேன்....


உன் காதல் பார்வை தாளாமல்
திணறுவது போல் ,
சொல்லவும் எழுதவும் கோடி இருந்தும்
சொற்கள் கொண்டு
அலங்கரிக்க முடியாமல்
இப்போதும் தடுமாறுகிறேன்!!


எங்கிருந்து ,
எப்படி ஆரம்பிப்பது ??
ம்ம்ம்..
இதோ கிடைத்துவிட்டது
முதல் வார்த்தை "பிரியமான".


ஒ ,
ஆரம்பம் சரி ,
ஆனால் முடிக்க இயலுமா ??
ஆதியும் அந்தமும் அற்ற
காதலை ஒரு காகிதத்தில்
சொல்வது சாத்தியமா ??


இதோ பெற்றுக்கொள்
நீ கேட்ட கடிதத்தை.
என்ன??
ஏதுமில்லா வெள்ளை காகிதம்
என்று யோசிக்காதே?


யாதுமாகி உன்னில் நிறைந்திருக்கும்
என் காதலை
வார்த்தைகள் கொண்டும்
எழுதுவது அசாத்தியமே!!
 


என்னை அறிந்த உனக்கு
இந்த

வெற்றுக்கடிதம் புரியாதா ??


- அகன்





கருத்துகள் இல்லை: